இவற்றை நாம்
1. பெற்றோர் சார்ந்தவை.
2. ஆசிரியர் சார்ந்தவை.
3. மாணவர் சார்ந்தவை.
4. சூழல் சார்ந்தவை.
எனப் பிரித்து நோக்கலாம்.
பெற்றோர்கள் சிறுவயதில் இருந்தே தாய் மொழியோடு எம்மை இணைத்து வழி நடத்தவில்லை. அதனால் பதின்ம வயதில் எமக்குத் தமிழ் படிக்க விருப்பமில்லை என்கின்றனர் பிள்ளைகள். அது உண்மைதான். புலம் பெயர்ந்த தமிழ்ப் பெற்றோர்கள் புதிய சூழலையும் வேலை, பொருளாதாரம் ஆகியவற்றையும் புரிந்து நிமிர்வதற்கு நீண்டகாலம் எடுக்கிறது. இக்கால கட்டத்தில் வாழிட மொழியில் தம் பிள்ளைகள் முன்னுக்கு வரவேண்டும் என்ற குறிக்கோளுடன் பெற்றோர் செயற்படுவதால் தாய் மொழி பற்றிச் சிந்திக்க பலபேர் தவறி விடுகின்றனர். இந்நிலை தாய் மொழி மறந்த அல்லது தெரியாத பதின்ம வயதினரை உருவாக்கி விடுகிறது.
அதுமட்டுமன்றி வீட்டு மொழியாகக்கூடத் தமிழைப் பயன்;படுத்தத் தவறி விடுகிறார்கள். 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு நறுமணம் அதிகம்' என்பது போல் ஆங்கில மொழி மீதான பெற்றோர்களின் ஆர்வம் தமிழ் தெரியாத இளம் தமிழ்த் தலைமுறையை உருவாக்கி விடுகிறது. ஆனால் தமிழில் திறமைத் தேர்ச்சியைப் பெறமுடியும் என்று அறியும் பெற்றோர் தமிழில் அடிப்படை அறிவே இல்லாத பிள்ளையை இந்த வகுப்புகளில் சேர்க்கிறார்கள். இதனால் பிள்ளைகள் குழப்பம் அடைந்து தமிழை வெறுக்கிறார்கள். சிறு வயதில் இருந்து தமிழைக் கற்பிக்காமையினால் தமிழ் அவர்களுக்குக் கடினமாகத் தெரிகிறது. திறமைத் தேர்ச்சி வகுப்புகளில் பாடங்கள் விளங்கவில்லையென்றால் சலிப்பு ஏற்படுவது இயற்கைதானே.
மாணவர் சார்பான காரணங்களை நோக்கும் போது நாளாந்தப் பள்ளி தவிர பல வகுப்புகளுக்கு பிள்ளைகள் செல்கிறார்கள். இதனால் தமிழ் படிக்க நேரம் இல்லை என்கிறார்கள். எழுதுதல், படித்தல் தவிர ஆர்வமூட்டும் செயற்பாடுகள் எதுவும் தமிழ் கற்றலில் இல்;லை என்கின்றனர். விரும்பிக் கற்கும் வகையில் ஆசிரியர் கற்பிக்கவில்லை. அதனால் தமிழ் வகுப்புகளுக்குப் போக எங்களுக்கு விருப்பம் இல்லை என்கின்றனர். ஆம் இதுவும் ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணமாகத்தான் இருக்கிறது.
வளர்ச்சி அடைந்த ஒரு நாட்டிலே ஒரு இனம் தனது தாய் மொழியை மூன்றாம் மொழியாகக் கற்பிக்கிறது என்பது எளிதான விடயமல்ல. பல் பண்பாடும் திரும்பிய பக்கமெல்லாம் கவனக் கலைப்பான்களும் நிரம்பி வழியும் ஒரு நாட்டில் தாய்மொழியின் பால் தமிழ் இளையோரின் கவனத்தை ஈர்ப்பதில் ஆசிரியர்களின் பங்கும் பணியும் முக்கியமானது. தாய்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுடைய கற்பித்தல் தொடர்பான அனைத்துச் செயற்பாடுகளும் மாணவர்களை மகிழ்ச்சியோடு இலக்கை நோக்கி அழைத்துச் செல்வதாக அமைய வேண்டும். பாடத்தைத் திட்டமிட்டு இன்முகம், இன்சொல், இன்செயல்கள் கொண்டு ஆசிரியர் கற்பித்தால் மாணவர்கள் விருப்போடு பள்ளிக்கு வருவர். பாடத்தையும் விரும்பிக் கற்பர்.
மாணவர்கள் விரும்பும் செயற்பாடுகள் மூலம் மொழியைக் கற்பித்தல், மாணவர்களின் தனியாள் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேம்படுத்த வழி காட்டுதல், வாய்ப்புகளை ஒவ்வொரு மாணவர்களுக்கும் வழங்குதல். நேர முகாமைத்துவம் மூலம் எவ்வாறு நாளாந்தப் பள்ளி வீட்டு வேலைகளுக்கும் தமிழ்ப்பாட வேலைகளுக்கும் இடையே எழும் முரண்பாடுகளைக் களைதல். இவையெல்லாம் கனடாவாழ் இளம் தமிழ்த் தலைமுறையை தாய் மொழிக் கல்வியை விரும்பிக் கற்கச் செய்யும் செயற்பாடுகள் ஆகும்.
தமிழ் மொழி தொன்மையான பாரம்பரியமிக்க அழகிய செம்மொழி ஆகும். தமிழ் படித்தாலும் தரணி ஆள முடியும். சிறப்புமிக்க தமிழ் மொழியை அழிய விடாமல் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வது பதின்ம வயதுத் தமிழ் மாணவர்களுடைய கடமையாகும். அத் தலையாய கடமையை பெற்றோர்களும் ஆசிரியர்களும் தமிழ் மாணவர்களும் சிறப்பாகச் செய்து உலக மொழிகளில் தமிழ் மொழியே முதன்மையானது என்று உலகுக்குப் பறைசாற்றிப் பெருமை கொள்ள வேண்டும்.
ஆக்கம்: கௌரி இரஞ்சன்
ஆசிரியர், கனடாத் தமிழ்க் கல்லூரி
![](https://irp.cdn-website.com/308a0342/dms3rep/multi/1827626-untitled-1.webp)
தமிழர்களின் மிகப் பழைய இலக்கியம் சங்க இலக்கியம் ஆகும். இரண்டாயிரம் ஆண்டு தொன்மை உடையதாகவும், ஆரியக் கலப்பு அதிகம் இடம் பெறாததாகவும் அமைந்த தமிழ் நாகரிகம் சங்க கால இலக்கியங்களில் இருந்தே அறியப்படுகின்றது. இந்த வீர ஊழி என்று அழைக்கப்படும் சங்க காலத்தில் வீரம் பெற்றிருந்த சிறப்பு மிக முக்கியமானதாகும். சங்க கால இலக்கியங்களில் தமிழர்களின் வாழ்வியல் மரபுகள் பல காணப்படுகின்றன. அவற்றுள் வழிபாட்டு மரபும் ஒன்றாகும். இந்த வழிபாட்டுப் பாரம்பரியத்தில் வீர வணக்கம் பெற்றிருந்த இடம் சிறப்பானதாகும்.
'ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிரேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்ததெனக்
கல்லே பரவினல்லது
நெல்லுகுத்துப் பரவுங் கடவுளு மிலவே' (புறம் -335 -மாங்குடிக் கிழார்)
போரில் பகைவர்கள் முன்னேறி வருவதைத் தடுத்து யானைகளைக் கொன்று வீரச்சாவடைந்த வீரனது நடுகல்லைக் கடவுளாகக் கருதி வழிபடுவதை விட நெல்லைச் சொரிந்து வழிபடும் வேறு தெய்வம் இல்லை என்பது இந்தப் பாடலின் பொருள் ஆகும்.
வீர வணக்க வழிபாட்டில் சடங்கு மற்றும் நினைவுச் சின்னம் தொடர்பான இரு நிலைகள் காணப்பட்டன.
வீர வணக்கம் சார்ந்து, இந்த இரு முறைமைகளும் சங்க இலக்கியத்தின் பாடு பொருளாகின. வெட்சித் திணைகளுக்கான துறைகளைக் கூறும் போது தொல்காப்பியர் நடுகல் வழிபாட்டு முறைக்கும் இலக்கணத்தை வரையறை செய்துள்ளார்.
'காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்
றிருமூன்று வகையிற் கல்லொடு புணரச்
சொல்லப் பட்ட வெழுமூன்று துறைத்தேழூ' (தொல்காப்பியம் - புறத்திணையியல்)
செங்குத்தாக நடப்பட்ட நடுகல்லிலே வீரச் சாவடைந்த வீரனின் உருவம் செதுக்கப்பட்டது. பின்னர் வீரனின் பெயர், வீரன் வீரச்சாவடைந்த போர்க்களம் அல்லது இடம் என்பன அக் கல்லில் பொறிக்கப்பட்டன. காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்துதல் என்ற ஆறு வழக்காறுகள் நடுகல் வழிபாட்டின் நடைமுறைகள் ஆகும். இந்த விதிமுறைகளைப் பின் பற்றி நடுகல் வழிபாடு நடைபெற்றது.
நடுகற் பீலி சூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ (புறநானூறு- 232 ஒளவையார்)
அதியமானது நடுகல்லைக் கண்டு ஒளவையார் கையறு நிலையில் பாடும் பாடல் இதுவாகும். நடுகல் ஆனவர்கள் காவற் தெய்வங்களாகவும், குல தெய்வங்களாகவும் கருதப்பட்டனர், தாம் வேண்டும் வரங்களைத் தருவார்கள் என்ற நம்பிக்கையும் அக்கால மக்களிடையே இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.
சங்க காலச் சமுதாயத்தில் போர் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. மக்களிடம் வீர உணர்வு மேலோங்கிக் காணப்பட்டது. 'போர் எனில் புகலும் புனைகழல் மறவர்' என்று புறநானூறு ( புறம்-31) எம் முன்னோர்களைப் பற்றிக் கூறுகின்றது. ஆண்கள் மட்டுமன்றிப் பெண்களும் வீரம் மிக்கவர்களாக இருந்தார்கள். தனது ஒரே மகனைப் போர்க்களம் நோக்கிச் செல்க! என்று அனுப்பிய வீரத் தாயையும், (புறம்- 279) உன் மகன் எங்கே? என்று கேட்டவருக்கு நான் பெற்றெடுத்த மகன் ஒரு புலி ஆவான். அவனைக் காண வேண்டும் என்றால் போர்க் களத்திலே தோன்றுவான் போய்ப் பார் (புறம்- 86) என்று பதில் கூறிய தாயையும், எனது மகன் போர்க்களத்திலே புறமுதுகு காட்டி ஓடி இருந்தால் அவனுக்குப் பாலூட்டிய எனது மார்பகங்களை அறுத்தெறிவேன் (புறம் 278) என்று கூறிய தாயையும், போர்க்களம் சென்று விழுப்புண் பட்டு வீரச்சாவடைந்த தம் கணவனைக் காணும் மனைவியின் வீரத்தையும் நாம் காண்கின்றோம். இந்த வீரத் தாய்மார்களின், வீரப் பெண்களின் மற மாண்பு பழந்தமிழர் பண்பாட்டின் தொடுமுடி ஆகும்.
ஆடு என்ற சொல் வெற்றி என்னும் பொருளில் பெரிதும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. போரில் வெற்றி பெறும் வீரன் ஆடவன், அல்லது ஆடவர் என்ற சொல்லுக்கு உரியவன் ஆகின்றான். இந்த ஆடவனை வீரன் என்று அழைக்கும் அளவிற்கு வீரம் அக்காலத்தில் முதன்மை பெற்றிருந்தது.
தாய் ஈன்று புறம் தர, தந்தை சான்றோனாக உருவாக்க, வேல் உருவாக்கித் தருபவர் தனது கடமையைச் செய்ய, அரசன் படைக்கலப் பயிற்சிகளையும், போராண்மையையும், ஊராண்மையையும் கற்பிக்க, மகனானவன் நாட்டைப் பகைவன் தாக்கும் போது, ஒளி பொருந்திய வாளினைத் தாங்கிச் சென்று, பகைவரின் யானைகளைக் கொன்று, பகைவரை அடக்கி வெற்றியோடு மீள்வான். இவ்வாறு சமூகத்தால் வளர்த்தெடுக்கப் பட்ட வீரனுக்குரிய நற்பண்புகளோடு உருவான வீரன் சான்றோன் ஆனான். (புறம்191, புறம் 195)
இத்தகைய நற்பண்புகள் கொண்ட ஒரு வீரன் வீரச்சாவடைந்த போது அந்த முழுச் சமுதாயமுமே சோகத்தில் ஆழ்ந்தது. ஒரு வீரனின் வீரச் சாவு, எவ்வாறு ஒரு முழுச் சமுதாயத்தின் இழப்பாக அமைந்தது என்பதைப் பாடு பொருளாகக் கொண்ட பல பாடல்கள் சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன.
(எ.கா. புறம் -242 இளையோர் சூடார் குடவாயிற் கீரத்தனார்.
இவ்வாறு மாடு பிடி சண்டையான வெட்சிப் போரிலும், கரந்தைப் போரிலும், ஏனைய போர்களிலும் போர்க் களங்களிலும் விழுப்புண் ஏற்று, வீரத் தழும்புகளோடு மானச் சாவடைந்த வீரர்களுக்கு அன்றைய பழந் தமிழர் சமுதாயம் நடுகல் (வீரக் கல், நினைவுக் கல்) வைத்து வீர வணக்கம் செலுத்தி வழிபட்டது. இது தமிழர்களின் மிகச் சிறந்த சால்பு ஆகும்.
பண்டைத் தமிழர்களின் மிகச் சிறந்த சால்பான நடுகல் வழிபாட்டு முறைமையையும், இந்த நடுகல் வழிபாட்டுக்குரிய மாவீர்களையும், துயிலும் இல்லங்களின் எழுகையையும், மானச்சாவடைந்த வீரர்களது சாவு ஏற்படுத்திய துயரத்தையும், எல்லோரது விழிகளிலும் கண்ணீர் வழிவதையும், ஈழத் தமிழர்கள் அவர்களை நினைவேந்தி நிற்பதையும் நாம் இன்று எமது கண் முன்னால் காண்கின்றோம். இந்த நினைவேந்தலில்,
ஆழக் கடலெங்கும் சோழ மகராசன் ஆட்சி புரிந்தானே அன்று
தமிழ் ஈழக் கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று.
காலை விடிந்ததென்று பாடு, சங்க காலம் திரும்பியது ஆடு.
என்ற தாயகப் பாடல் செவி வழி நுழைந்து உணர்வுகளில் நிறைகின்றது.
மற மானம் மாண்ட வழிச் செலவு தேற்றம்
என நான்கே ஏமம் படைக்கு ( திருக்குறள் -படைமாட்சி -567)
ஆக்கம்: கலாநிதி குலமோகன்
ஆசிரியர், கனடாத் தமிழ்க் கல்லூரி
![](https://lirp.cdn-website.com/308a0342/dms3rep/multi/opt/dfasdf-1920w.jpg)
'எம்மை ஈன்ற தாயும் தாய் தந்த தாய்மொழியும் எம்மிரு கண்கள்'. தாயின் மடியில் குழந்தையாய் அறிந்து கற்ற முதல் மொழி தாய்மொழி ஆகும். தாயானவள் குழந்தைக்கு உணவூட்டுவதோடு தாய்மொழி உணர்வையும் ஊட்டுகின்றாள். அதற்குப் பயன்படுவது தாய்மொழியே. தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை என்பது போல தாய்மொழியைப் போல் வேறு மொழியில்லை என்பது அறிஞர்களின் கருத்தாகும். ஒருவன் எத்தனை மொழி வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம், ஆனால் சிந்திப்பதற்கும், அறிவை வளர்ப்பதற்கும், முடிவுகளை எடுப்பதற்கும் அடிப்படையாக அமைவது தாய்மொழியே ஆகும்.
தாய்மொழி மூலம் கல்வி பயிலும் குழந்தையாலேயே தனது இயல்புகளுக்கேற்ப நிறைந்த திறன்களை வெளிக்காட்டமுடியும் என்பது கல்வி உளவியலாளர்கள் கருத்தாகும். இதனால் தான் உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் கல்வி தாய்மொழியிலேயே புகட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. உலகின் முன்னணியில் உள்ள நாடுகளும், அறிஞர்களும் தாய்மொழியிலேயே கல்வி கற்றவர்களாக உள்ளார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, யப்பான் போன்ற நாடுகளில் தத்தம் மொழிகளிலேயே கல்வி கற்பிக்கப்படுகின்றன. தாய்மொழி மூலம் கல்வி பயின்ற நிபுணர்களையும், அறிவியலாளர்களையும் கேட்டால் சிந்தனை வளர்ச்சிக்குத் தாய்மொழியே உகந்தது எனக் கூறுகின்றனர்.
இன்று புலம்பெயர் நாடுகளில் வாழும் எம் பெற்றோர்கள் ஆங்கில மொழியே உயர்கல்விக்கு ஏற்ற மொழி என நம்புகின்றனர். எமது தாய்மொழி மூலம் எதையும் சாதிக்க முடியாது எனக் கூறுகின்றனர். ஆனால் புலம்பெயர் நாடுகளில் ஆங்கில மொழி மூலம் கல்வி பயின்றோரிலும் பார்க்கத் தாய்மொழி மூலம் கல்வி பயின்றோரே சிறந்த அறிவியலாளர்களும், பொறியியலாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.
இலங்கையில் நடந்த திட்டமிட்ட இன அழிப்புப் போரில் நாம் இழந்தவை பல. ஆனாலும் எம்மோடு நாம் மொழியையும் மொழியோடு கலந்த பண்பாடுகளையும் எடுத்து வந்தோம். எமது தாய்மொழியே எமது வேராக உள்ளது. அதுவே எமது அடையாளம். எமது அடையாளத்தைத் தொலைத்து விடாமல் எமது தலைமுறையை வளர்த்தெடுக்க வேண்டும். தாய்மொழி மீது பற்றுக் கொள்ள வேண்டும். பெற்ற தாயைக் காட்டிலும் நம் தாய்மொழி உயர்ந்தது ஆகும். உலகில் பிறக்கும் ஒவ்வொரு தமிழ்ப் பெற்றோரின் குழந்தைகளும் தாய்மொழியில் பேசவும் எழுதவும் தெரிந்த குழந்தைகளாக வளர வேண்டும். அப்படி ஒரு நிகழ்வு நடக்கும்போது மட்டுமே எமது தலைமுறையைப் பண்பாடு, பழக்கவழக்கம் உள்ளவர்களாக வளர்க்க முடியும். தாய்மொழி மூலம் தான் பண்பாடு பின்பற்றப்படுகிறது.
நாம் வாழும் நாடுகளில் தாய்மொழி தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் தாய்மொழியே எமது அடையாளம் என்பதை மறுப்பதற்கில்லை. தாய்மொழியைக் கற்பித்தற்குரிய அனைத்து வசதிகளையும் பெற்றோர் தமது வருங்காலச் சந்ததியினருக்காக பயன்படுத்த வேண்டும்.
நூலகங்களில் உள்ள தமிழ் நூல்கள், தன்னார்வ நிறுவனங்களால் வழங்கப்படும் தமிழ் வகுப்புகள், அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட வகுப்புகள் என்பவற்றைச் சரிவரப் பயன்படுத்தப்பட வேண்டும்.
1950இல் பொதுவுடமைப் புரட்சி மூலம் சீனாவும், இரண்டாம் உலகப்போரில் மிக அழிவைச் சந்தித்த யப்பானும் மீள உருப்பெற்று உலகின் முன்னணி நாடுகளாக விளங்கக் காரணம் அவர்கள் தாய்மொழிக் கல்வி மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு இளந்தலைமுறையினரை தட்டி எழுப்பி விட்டமையே ஆகும். தாய்மொழியின் மீது ஒவ்வொரு பெற்றோரும் பற்றுக்கொண்டு, இதுவே எமக்கு வேராக அமையப் போகின்றது என்பதை இளம் தலைமுறையினருக்குத் தாய்ப் பால் ஊட்டுவது போல் ஊட்ட வேண்டும். மக்களின் ஆதரவால் அரசியல்வாதிகளாக ஆகிவிடலாம். ஆனால் ஒரு துறையில் நிபுணர்களாக உயரத் தாய்மொழிக் கல்வி அவசியமானதாகும்.
தாய்மொழி அறிவும், பேச்சும், எழுத்தும், ஆராயும் திறனும் தமிழ் இளையோருக்கு இருக்க வேண்டும். தாய்மொழி இழந்தவன் உலகில் முகவரி இல்லாதவன் என்ற நிலை உருவாக வேண்டும். தாய்மொழியை விடுத்து அந்நிய மொழியில் கல்வி பயில நினைப்பது அழகாகாது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தாய்மொழியில் பெயர்த்தல் வேண்டும். தாய்மொழியில் அறிவியல், கலைகள் கற்றிடும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற பாரதியின் கனவுக்கு உயிர் கொடுப்போம். தாய்ப்பாலே உடல் நலத்திற்கு உகந்தது. தாய்மொழியே சிந்தனை வளர்ச்சிக்கும், முடிவுகளை எடுக்கவும் சிறந்தது.
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழில் இல்லை
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
உலகில் எந்த மொழி அதிகமாகப் பேசப்படுகின்றதோ அந்த மொழியே வாழும் மொழியாகும். தாய்மொழியும் அதனோடு சேர்ந்த பண்பாடுகளின் பெருமையும் அதன் தொன்மையில் இல்லை. அதன் தொடர்ச்சியிலேயே உள்ளது என்பதை உணர்ந்து தமிழ்மொழியைப் பேசுவோம், எழுதுவோம், தாய்மொழியை இழக்காத தமிழராய் வாழ்வோம்.
ஆக்கம்: திலகவதி சின்னப்பு
ஆசிரியர், கனடாத் தமிழ்க் கல்லூரி